Monday 20 March 2017

ரூ.77.7 கோடி மதிப்பிலான அந்நிய செலவாணி மோசடிகள் - தினகரன் ஆகிய நான் - பகுதி 2

ரூ.77.7 கோடி மதிப்பிலான அந்நிய செலவாணி மோசடிகள்
--
டிடிவி தினகரனது பின்னணி பற்றி கடந்த பதிவில் தெரிவித்திருந்தோம். அதையும் தாண்டி அவருக்கென சில அருமை பெருமைகள் உண்டு. அண்ணாரது தனிச்சிறப்பு என்னவென்றால், கணக்கு வழக்கே இல்லாமல் சகட்டு மேனிக்கு அமலாக்கப் பிரிவினரிடம் சிக்கினாலும், இன்று வரை வெற்றிகரமாக 22 ஆண்டுகளாக அந்த வழக்கையெல்லாம் இழுத்துக்கொண்டே வருகின்றார். இந்த விவகாரத்தில் செல்வி.ஜெயலலிதாவிற்கே இவர் ஆலோசனையாளராக இருந்திருக்கலாம். கடந்த ஜனவரி 6-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இவருக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்ப்பட்ட வழக்கு கூட, இவ்வகையில் அவர்தம் மணிமகுடத்தில் ஒன்று தான். திரு.தினகரனது வழக்குகளை பற்றி விவரிக்கும் ஒரு ஆங்கில பத்திரிகை “தனது கையில் புரளும் கோடிகள் குறித்து கணக்கிட நேரமில்லாததால் மாட்டிக்கொண்டவர்” என அழகாக வர்ணிக்கிறது (http://indiatoday.in/story/as-offenders-go-t.t.v.-dinakaran-is-from-a-privileged-category/1/289670.html).

1992-ம் ஆண்டு, தமிழக அரசியலில் மன்னார்குடி மாபியா செல்வாக்கோடு சுற்ற ஆரம்பித்த காலத்தில் எழுந்த முதல் புகாரே அண்ணார் மேல் தான். இவரது எமரால்ட் நிறுவனம், சென்னை நகரின் முக்கிய பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்தன. உடனடியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எடுத்த ‘கடுமையான’ நடவடிக்கையால், அந்த வழக்கு என்னவானது என்றே தெரியாமல் போனது. அதன் பின்னர் 1995-ல் எழுந்தது தான், ஹவாலா என்னும் அந்நிய செலவாணி மோசடி வழக்குகள். இவர் இந்த வழக்கில் சிக்கியது கூட ‘காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை’ தான். அக்காலத்தில் பிரசித்திபெற்ற ஜெயின் ஹவாலா மோசடி வழக்கில், சென்னையை சேர்ந்த அமீர் என்ற முக்கியப்புள்ளி சிக்க, அவரது அலுவலகத்தில் கிடைத்த கோப்புகளில் ஒன்று தான் தினகரன் மீதுள்ள அந்நியச் செலவாணி வழக்கின் ஆரம்பம்.

அதென்ன அந்நியச் செலவாணி, ஹவாலா மோசடி.. என்கிறீர்களா? இந்தியாவில் ரூபாயாக சம்பாதித்த பணத்தை வெளிநாட்டில் அந்தந்த நாட்டு பணமாக மாற்றவும், வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றவும் அரசு நிறுவனங்கள், அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் மூலமே செய்ய முடியும். பொதுவாக, கருப்பு பணமாக வருமானத்தில் காட்டாமல் சட்டத்திற்கு புறம்பாக சேர்க்கப்படும் அனைத்து பணமும் இம்மாதிரியாக வெளிநாடுகளில் பதுக்கிவைக்க இந்த வழியை பின்பற்ற முடியாது. வெளிநாடுகளில் இதற்கென செயல்படும் இடைத்தரகர்கள் மூலம் இந்த கருப்பு பணங்கள் வெளிநாட்டு பணமாக அந்தந்த நாட்டில் மாற்றப்படும். பின்னர் அதையே நன்கொடையாகவோ, இல்லாத நிறுவனங்கள் மீதான முதலீடாகவோ வெள்ளையாக திரும்ப இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும். இந்த அரிய சேவையைத் தான் முன்னாள் முதல்வருக்கு டிடிவி.தினகரன் செய்து வந்தார் என்கிறது அமலாக்கத்துறை.

இப்படியான, இந்த அந்நியச் செலவாணி மோசடி வழக்கு ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் ஐந்து வழக்குகள், தினகரன் மீது. அன்றைய மதிப்புகள்படி இதன் மொத்த மதிப்பு 77 கோடியே 70 லட்சம் ரூபாய் (கொஞ்சம் கம்மிதானோ..!). இதுபோக, இவ்வழக்கு சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு வழக்குகள் என இவர்மீது மொத்தம் ஏழு வழக்குகள், 2004 நாடாளுமன்ற தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவின் படி. அந்த வழக்குகளின் விவரம் பின்வருமாறு:

● 1991-95ல் ஒரு கோடியே நான்கு லட்சம் டாலர் ($10,493,313) மற்றும் நாற்பத்தி நான்கு லட்சம் பவுண்ட் (€44,37,242.90) அளவிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 27/1996) வழக்கு,
● 1994-95ல் நான்கு லட்சம் டாலர் ($477,760) மதிப்பிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 81/2001) வழக்கு
● அதே காலகட்டத்தில் $90,000 டாலர் மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 82/2001) வழக்கு
● பத்து லட்சம் டாலர் ($1,000,000) மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 83/2001) வழக்கு
● மேலும் 36 லட்சம் டாலர் ($3,636,000) மற்றும் ஒரு லட்சம் பவுண்ட் (€1,00,000) மதிப்பிலான மற்றுமொரு வழக்கு
● இவையெல்லாம் போக, லண்டன் ஹோட்டல் வழக்கு மூலம் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஐந்தாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்

இதில் மேற்குறிப்பிட்ட முதல் வழக்கை எடுத்துக்கொண்டால், அமெரிக்கா அருகிலுள்ள பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் என்ற கண்காணாத தேசத்தில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Dipper Investments) என்ற பெயரில் 90-களில் ஒரு நிறுவனம் நடத்திவந்த தினகரன், அதற்கு இங்கிலாந்தில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் (Barclays Bank) இருந்து, ஒரு கோடியே நான்கு லட்சம் டாலர் மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்கிறார். இது அந்நியச் செலவாணி முறைப்படுத்துதல் சட்டம் (FERA Act) பிரிவு 8(1)-ன் படி குற்றம். மேலும் மீர் (Meer), கேர் அண்ட் தேசாய் (Care and Desai) என்ற நிறுவனங்களுக்கு 43 லட்சம் பவுண்ட், வெஸ்ட்பேக் லிமிடட் (Westback Ltd) நிறுவனங்களுக்கு 90 ஆயிரம் பவுண்ட், அயர்லாந்தில் உள்ள மற்றொரு வங்கிக்கு 23 ஆயிரம் பவுண்ட் என மொத்தம் 44 லட்சம் பவுண்ட் அளவிற்கு முறைகேடாக பண பரிவர்த்தனை மேற்கொண்டார்.

இந்த முறைகேட்டிற்காக FERA சட்டப்பிரிவுகள் 8(1), 9(1)(a) மற்றும் 14-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்வேறு போராட்டத்திற்கு பிறகு நவம்பர் 2, 1995 அன்று கைது செய்யப்பட்டார். அந்த கைதும் கூட, சாதாரணமாக இல்லை; கடந்த மாதம் சசிகலா அவர்கள் சிறை செல்லும்போது எப்படி சொகுசுககார்கள் புடைசூழ பிக்னிக் போவது போல பெங்களூர் சென்றாரோ, அதுபோலவே திரு.தினகரனும் நான்கைந்து மாத அலைக்கழிப்பிற்குப் பிறகு பெரும் தொண்டர் படையுடன் சென்று சரணடைந்தார். அந்த 22 வருட வழக்கில் தான் அவருக்கு சமீபத்தில் ரூ.25 கோடி அபராதம் (ரூ.31 கோடி அபராதத்தில் ஆரம்பித்தது) விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் சுவாரசியமான விசாரணை, தினகரனின் தில்லாலங்கடி பற்றியெல்லாம் பார்க்கும் முன் மற்றுமொரு விசித்திரமான வழக்கு பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். அதுதான், சொத்துக்குவிப்பு வழக்கில் தினகரன் இருந்த கதை.

தினகரன் மீதான மோசடி வழக்குகள் ஒவ்வொன்றாய் வெளிவர, வெளிநாடுகளில் அவர் வாங்கியிருந்த சொத்துக்கள் பற்றிய கணக்கீடு எடுத்தபோது சிக்கியது, தினகரன் பெயரில் இருந்த ஸ்லாலி ஹால் (Slaley Hall) மாபெரும் சொகுசு ஹோட்டல். ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த பிரசித்திபெற்ற ஹோட்டல், அன்றைய மதிப்பிலேயே சுமார் ரூ.280 கோடி; அதன் உரிமையாளராக இருந்தார் தினகரன் என்பது விசாரணை அதிகாரிகளையே மிரள வைத்தது. பின்னர், இதில் ஜெயலலிதாவும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவர, ஜெயாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இதுவும் சேர்க்கப்பட்டு, ஐந்தாவது குற்றவாளியாக திரு.தினகரனும் சேர்க்கப்பட்டார். ஆனால், இதன் மீதான சாட்சி்கள் யாவும் வெளிநாடுகளில் இருப்பதால் சொத்துக்குவிப்பு வழக்கு இழுத்தடிக்கப்படலாம் என்ற ஒரே காரணத்திற்காக, கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் திரு.ஆச்சாரியாவால் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இம்மாதிரியான இமாலயத்தொகை வழக்குகளில் எல்லாம் டிடிவி தினகரன் சிக்கினாலும், தொடர்ந்து பல தில்லுமுல்லுகள் மூலம் இவற்றையெல்லாம் சமாளித்து வந்தார். அதுபற்றிய தகவல் அடுத்த பதிவில்.

(தொடரும்...)

No comments:

Post a Comment