தினகரன் ஆகிய நான் - 1
--
யார் இந்த டிடிவி தினகரன்?
--
--
யார் இந்த டிடிவி தினகரன்?
--
புதிய ஆட்சி பதவியேற்று 10 மாதங்களுக்குள் நான்காவது முதல்வரை காண்கின்ற ஒரு அரிய வாய்ப்பில் உள்ளது தமிழகம். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார் என தெரிந்தே செல்வி.ஜெயலலிதாவை முதல்வராக்கியது மக்கள் செய்த தவறு என்றால், அதிகார ஆசையில் திருமதி.சசிகலா நடத்தியது, தற்போது நடத்திக்கொண்டிருப்பது யாவும் மக்களுக்கு கிடைத்த தண்டனை எனலாம். கூவத்தூர் கூத்துகள் துவங்கி, ‘துக்கத்தைக்கூட தூக்கலாக’ வாசித்த நிதி அமைச்சரின் நேற்றைய நிதிநிலை அறிக்கை வரை அனைத்தும் இதற்கு நல்ல உதாரணம்.
சசிகலா முதல்வரா? என்று நாமெல்லாம் பொங்கிக் கொண்டிருந்த வேளையில் சரியான நேரத்தில் ‘தாமதமான’ தீர்ப்பு வர, ஒருவழியாக சசிகலாவிடம் இருந்து தமிழகம் தப்பியது. ஆனால், சிறைக்கு செல்லும் முன் திரு.டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக ஆக்கி கட்சியில் தன் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டார். அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்று கணிப்பதற்குள், தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட களமிறங்கிவிட்டார், திரு.டிடிவி தினகரன் - ஜெயலலிதாவின் அதே ஆர்கே நகர் தொகுதியில்.
யார் இந்த டிடிவி தினகரன்? - இளம் வயதிலேயே அந்நிய செலாவணியில் கோடிக்கணக்கில் முறைகேடாக பண பரிவர்த்தனை செய்து பொருளாதார குற்றவியல் துறையினரையே வாயடைக்க வைத்த மாபெரும் அவதார புருஷர். அவரது ‘பெரும்புகழை’ பேசும் முன் அவர் பற்றிய அறிமுகம் - திருமதி.சசிகலாவின் சகோதிரி வனிதாமணிக்கு பிறந்த மூன்று மகன்களில் மூத்தவர் தான் இந்த தினகரன். ஜெயாவின் நெருங்கிய தோழியாக சசிகலா அறியப்பட்ட பின், அவர் மூலமாக 1988 முதல் ஜெ.வின் நம்பிக்கைக்கு உரியவராக அறியப்பட்டவர்.
பின்னர், ஒரு சில முறை அதே ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டாலும், மன்னார்குடி மாஃபியா என்றழைக்கப்படும் சசிகலா குடும்பத்தினரின் ஒரே நேரடி அரசியல்வாதி இவர் மட்டும்தான். தனது 40வது வயது வரை பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டவர் (BE Civil Incomplete) என விசித்திரமான கல்வித்தகுதி கொண்ட இவர், தற்போது தன்னை MBA பட்டதாரி என்று கூறிக்கொள்கிறார். 1991-96 வரை நடைபெற்ற அந்த ‘பொற்கால ஆட்சியில்’ வெளிநாடுகளில் தங்கியிருந்து இங்கு நடக்கும் கொள்ளைகளுக்கு பல வகையிலும் உடந்தையாக இருந்தார்.
இவரது தம்பிமார்கள் டிடிவி சுதாகரனும், டிடிவி பாஸ்கரனும் உள்ளூரிலே சொத்துக்கள் வளைத்துப்போடுவது, அடித்துப் பிடுங்குவது என பிஸியாக இருக்கும்போது, இவரோ சிங்கப்பூர், இங்கிலாந்து என நாடுவிட்டு நாடு பாய்ந்து மோசடியாக சேர்த்த பணத்தையெல்லாம் ஹவாலா மோசடி மூலம் வெள்ளையாக்கிக் கொண்டிருந்தார். இந்த டிடிவி (TTV - திருட்டு தீவிரவாதிகள் வென்டர்ஸ் என்ற அர்த்தமும் உள்ளதாம்) பிரதர்ஸின் ஒட்டுமொத்த வழிகாட்டிகள் மாண்புமிகு அம்மா மற்றும் மாண்புமிகு சின்னம்மா தான் என்கிறது ஊழல் தடுப்பு பிரிவு, அமலாக்கத் துறை, சிபிஐ, டிஜிஏசி, போன்ற அமைப்புகள்.
ஊழலில் இவ்வாறு கைதேர்ந்த அனுபவம் பெற்ற பின், திரு.தினகரன் பெரியகுளம் மக்களவை தொகுதியில் 1999-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அந்த காலத்தில் இவரது முன்னாள் தளபதியும் இன்னாள் எதிரியுமான திரு.பன்னீர் செல்வத்துடன் பழக்கம் ஏற்பட்டு, முதன்முறையாக ஓபிஎஸ் முதல்வர் ஆனார். பின்னர் 2004-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். உடனடியாக அதே ஆண்டு அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தார்.
பின்னர், 2011-ல் சசிகலா போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறும்போது, ‘அந்த 17 பேருடன்’ சேர்ந்து இவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், செல்வி.ஜெயலலிதாவின் இறப்பு வரை ஓரங்கப்பட்டு கண்காணாமல் போயிருந்த இவர்தான், இன்று தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று அதிமுகவினரே அடித்துக் கூறுகின்றனர். திரு.பன்னீர்செல்வத்திற்கு பயந்து நடைபெற்ற ‘ஆபரேஷன் கூவத்தூர்’ எனும் சரித்திர போராட்டத்தின் கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் என அனைத்தும் இவர்தான் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம். அட.. இப்படிப்பட்டவரா இவர் என்கிறீர்களா? இன்னும் அண்ணாரது வழக்கு விவரங்கள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டால் என்ன சொல்வீர்கள்..?
(தொடரும்…)
No comments:
Post a Comment