1995, 96-களில் தினகரன் மீது வழக்குகள் பதியப்படும்போது, ஆதாரங்கள் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள இவரது சொத்துமதிப்பு ரூ.60 கோடி அளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உண்மையில் அவரது சொத்துமதிப்பு (அப்போதைய மதிப்பில்) சில நூறு கோடிகளைத் தாண்டும் என்றும், அதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. அந்த விசாரணையில் தான் ரூ.280 கோடி மதிப்பிலான லண்டன் ஹோட்டல் இவர் பெயரில் இருந்தது தெரிய வந்தது. ஆனால், 2004 நாடாளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் போது தனது சொத்து மதிப்பு ரூ 1.15 கோடி மட்டுமே என தெரிவித்திருந்தார். தற்போது ஆர்கே நகர் தேர்தல் வேட்புமனுவில் ரூ.16.17 கோடி மட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தனது வருமானம் பற்றியோ சிங்கப்பூர் சவகாசம் பற்றியோ எந்த தகவலும் அவர் தனது எந்த வேட்புமனுக்களிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் இவர் பெயரில் கருப்பு பணம் பதுக்கலுக்கு பெயர் போன பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில், டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ், பேன்யன் ட்ரீ என்டர்பிரைசஸ், டர்கீ என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளதாக இவரது வழக்குகளில் கூறப்பட்டுள்ளது. அவைகள் மூலமாக, சட்டத்திற்கு புறம்பான பணப்பரிமாற்றத்தில் தினகரன் ஈடுபட்டுள்ளதாகவும் மிகத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், அண்ணாரது தொழில் என்ன என்பது வெளிப்படையாக தெரிய வருகின்றனது.
இந்த கருப்புப்பண கைவரிசையை எப்படி செய்தார் என்று அமலாக்கத் துறை கண்டறிந்தது. இதையெல்லாம் ஜெயவுக்காகத் தான் செய்தார் என்பது ஊருக்கே தெரிந்தும், அதற்கான வழக்குகள் ஏதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் முதலாம் குற்றவாளியின் அரசியல் தலையீடா அல்லது இவரது அதிர்ஷடமா என தெரியவில்லை. தினகரன் மீதான வழக்குளில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் - இவையாவும் FERA மற்றும் COFEPOSA என்றழைக்கப்படும் அந்நியச் செலவாணி முறைகேடுகள் மற்றும் கடத்தல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் உள்ள வழக்குகள். இவைகள், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் குற்றங்களாக கருதப்படும் அளவிற்கு கடுமையான குற்றங்கள்.
இத்தகைய குற்றஞ்சாட்டப்பட்ட யோக்கியரைத் தான், கருப்பு பணங்களை வெள்ளையாக்குவதில் தனித்திறமை பெற்ற வித்தகரைத் தான் அடுத்த முதல்வராக அதிமுகவினர் கைகாட்டுகின்றனர்.
ஆனால் ஒரு உண்மையை மட்டும் நாமும் ஒத்துக்கொள்ள வேண்டும் - இல்லாத நிறுவனங்களுக்கு கணக்கு காண்பிப்பது, இயங்காத நிறுவனங்களில் கோடிக்கணக்கில் லாபம் பார்ப்பது, வரையறை இல்லாமல் கண்ணில்படும் சொத்துக்கள் யாவையும் வாங்கிக்குவிப்பது, எல்லாவிதமான நீதிமன்றங்களிலும் ஏறி இறங்கியது, எந்தவித குற்றவுணர்வும் இன்றி வழக்குகளை எல்லாம் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பது என செல்வி.ஜெயலலிதாவின் அத்தனை அம்சங்கள் பொருந்திய இவரே, அவரது உண்மையான அரசியல் வாரிசாக இருக்க முடியும்.
முன்பெல்லாம், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மக்களுக்காக வாழ்ந்தவர்கள், தமிழகத்தின் நலன்சார்ந்து சிந்திக்கக் கூடியவர்களே அரசியல்வாதிகள் ஆயினர். அதன்பிறகு, அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்கும் இடங்களில் காசு பார்க்கும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் தமிழகத்தை ஆண்டு வந்துனர். ஆனால், தற்போதெல்லாம் கொள்ளையடிப்பதிலும் சட்டத்தை ஏமாற்றுவதிலும் 20 வருடங்களுக்கு மேலாக முன்னனுபவம் பெற்றவர்களே தமிழகத்தின் அடுத்த முதல்வர் என அடித்துக் கொள்கின்றனர்.
முதலில், மன்னார்குடி மாஃபியாவின் தலைவி முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் போது, இது தமிழகத்திற்கு ஏற்படும் பேராபத்து என தடுக்க போராடினோம். இறுதியில் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் தமிழகத்தை காப்பாற்றியது. அடுத்ததாக அதே குடும்பத்தின் மற்றுமொரு உத்தமர் ஒருவர் தமிழகத்தை ஆள நினைக்கிறார்.இம்முறை ஆர்கே நகர் மக்களின் தீர்ப்பை நம்பி தான் மொத்த தமிழகமும் காத்துக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக தனது மொத்த பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி அந்த எட்டாக்கனியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருப்பார்.
இன்னும் சில தினங்களுக்கு அத்தொகுதியில் கணக்கில்லாமல் காசு வாரி இறைக்கப்படும். கொள்ளையடித்து சேர்த்த அத்தனை பாவப்பணங்களும் வீடு வீடாக சென்றடையும்,மக்களையும் அக்கொள்ளையில் பங்காளிகள் ஆக்க.. தற்போதைக்கு நம் அத்தனை பேரின் நம்பிக்கையும் அத்தொகுதி மக்களிடம் மட்டும் தான். ஆனால், அவர்களோ “அட போங்க தம்பி, நாங்க மொத அக்கியூஸ்ட்டையே ஜெயிக்க வச்சவங்க. இவரென்னவோ அஞ்சாவது அக்கியூஸ்ட் தானே” என வாக்களிப்பார்களா, இல்லை “ஐயோ, நாங்க இப்ப சுத்தமா திருந்திட்டோம் பாஸூ” என்று அம்மக்கள் சொல்லப் போகிறார்களா, என்பது ஏப்ரல் 15 அன்று தான் தெரியும்.
அதுவரை “டிடிவி தினகரன் ஆகிய நான்…” என்று தினமும் அவர் தன் கனவினில் பேசி மகிழட்டும்.
(முற்றும்)